பட்டிப் பொங்கல் தினமான நாளை நல்லூரில் கவனவீர்ப்பு

uuu பட்டிப் பொங்கல் தினமான நாளை நல்லூரில் கவனவீர்ப்புபட்டிப்பொங்கல் தினமான – நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – மயிலத்தமடுவில் பசுக்கள், காளைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு – மாதவனை – மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர் செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்திவருகின்றனர்.

வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால் வடிக்க முடியாத கொடுமைகளை வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். அதனை விடசுட்டும் வெட்டியும், மின்சாரம் பாய்ச்சியும் இந்த பசுக்களுக்கும் காளைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடுமைகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் முறையாக அமுல் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு, பட்டி மேய்ச்சல் தரைகளிலிருந்து அனைத்து சட்டவிரோதிகளும் அகற்றப்பட வேண்டும். மேய்ச்சல் நிலத்தில் எந்தவொரு பிற நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவற்றை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாக அரச இயந்திரத்துக்கு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

சொல்லொணா துயரை சந்தித்துள்ள கிழக்கின் பண்ணையாளர்களையும் பசுக்களையும் பாதுகாக்க அனைவரும் அணி திரள்வோம். தமிழர்களின் பசுக்களுக்கும் காளைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி செலுத்தும் உயரிய நாளில்
அனைவரும் எமது உணர்வுகளை வெளிக்காட்ட நல்லை ஆதீன முன்றிலில் பட்டிப் பொங்கலான எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் கவனவீர்ப்பில் அனைவரையும் பங்குகொண்டு கிழக்கின் மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் வெற்றிபெற வலுச்சேர்க்குமாறு வேண்டுகின்றோம்” என்றுள்ளது.