கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள நிலையில், கடந்த 03 வாரங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் பாடசாலை மூன்று வாரங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “ஏன் சிறுபான்மையர் எமது கல்வி உரிமையை பறிக்கின்றீர்“ மற்றும் ‘கல்வி கற்கும் உரிமை எமக்கு இல்லையா?“ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
வலயக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் மாணவர்கள்,அங்கிருந்து வலயக் கல்வி பணிமனை வரை பேரணியாக சென்று வலயக் கல்வி பணிமனை வளாகத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.கங்கேஸ்வரனால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.