பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்குவதில் இலங்கைக்கு அக்கறையில்லை

இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த விசாரணைக்குழுக்களும் தமது பணிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன் அவை காணாமல் போன வரலாறுகளே உண்டு. இலங்கை அரசு உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயல்வதாக அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் உடபட 9 அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை செவ்வாய்கிழமை (5) வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கபட்டவர்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். விசாரணைக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை அரசுகள் காலம் காலமாக மேற்கொண்டுவருது வரலாறு. எந்த ஆணைக்குழுக்களும் இதுவரையில் நீதிணை வழங்கியது கிடையாது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

அங்கு ஆணைக்குழுக்கள் இயங்குவதற்கான சுதந்திரமான நிலை இல்லை என்பதுடன், ஆணைக்குழுக்கள் நீதியான விசாரணைகளையும் மேற்கொள்வதில்லை. பாதிக்கப்பட்ட சமூகங்களையும் அவர்கள் நீதியாக நடத்துவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.