பாராளுமன்றக்குழுத் தலைவராக சுமந்திரன் நியமிக்கப்படுவாா்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நியமிப்பதில் கடந்த வாரம் இடம்பெற்ற குழப்பங்களையடுத்து எம்.ஏ.சுமந்திரனை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காலஞ்சென்ற சம்பந்தன் அந்தப் பதவியில் இருந்த காலத்தில், அவருக்கு உதவியாக சுமந்திரனே அதற்கான கடமைகளைப் பெரும்பாலும் செய்து வந்தவா்கள் என்ற முறையில் இதற்கான முடிவை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினா்கள் எடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவு செய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியிருந்தன. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்தப் பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமிழரசு கட்சி சார்பில் பாராளுமன்றத் துக்குத் தெரிவானவர்களின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார் அதுகுறித்து சிறிதரன் செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க ஆதரவு தெரிவித்தார். செல்வத்தை பாராளுமன்ற குழுத் தலைவராக நியமித்தால் பிளவுண்டு போயுள்ள கூட்டமைப்பை மீண்டும் ஒற்றுமைப்படுத்த வழி ஏற்படும் என்று கூறினார்.

ஆயினும் இதனை சுமந்திரன் எதிர்த்தார். இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார். பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வத்தை நியமிக்க சாணக்கியன் எம்.பியும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

“செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இப்பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம். இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்ற ஒரு புது கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசு கட்சியின் பெயரில் இருக்கும் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு. அப்படி அவர்கள் தலைமை தாங்குவதானால் அது குறித்து தமிழரசுக் கட்சியில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” என்று சிறிதரன் தெளிவாக வலியுறுத்தினார்.

சுமந்திரனும் அக்கட்சியின் ஏனையோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறிதரன் கடுமையான ஆட்சபனைகளை கலந்துரையாடலில் வெளிப்படுத்தினார். தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படாமல் தள்ளிப்போயிற்று. இறுதியில் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனை நாடாளுமன்ற குழுவின் தலைவராக நியமிக்க தமிழரசுக் கட்சியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.