பொதுத் தோ்தலுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை – ஜனாதிபதித் தோ்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கீடு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியானது ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளையில் ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்த உடனடியாகவே, ஜனாதிபதியாக யாா் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தோ்தல் நடத்தப்படும் சூழ்நிலை காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.