பொய்களையே கொட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிரேமதாஸ சொல்கிறாா்

“நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் உண்மை நிலையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பொய்களைக் கொட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு ஒஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று இரவு ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியால் கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அவரின் விசேட உரைக்கு ஒஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார் ஜனாதிபதி. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்று சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது” என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா்.

”நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை இந்த நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எமது நாடு 92 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் கடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டுள்ளது. இந்தக் கடன் தொடர்பில் அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது” என்றும் எதிா்கட்சித் தலைவா் தெரிவித்தாா்.