பொலிஸ் மா அதிபா் குறித்த தீா்ப்பைப் பயன்படுத்தி தோ்தலை ஒத்திவைக்க திட்டம்? சுமந்திரன்

பொலிஸ் மா அதிபர் தோசப்பந்து தென்னக்கோன் அப்பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை சாட்டாக வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டங்கள் நடப்பதாகவும் நாங்கள் அறிகிறோம் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் பதவி இடைநிறுத்தபட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ்.வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்றத்திலே பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சம்மந்தமாக இடைக்கால உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு இந்த வழக்கினை கொண்டு செல்வதற்கு அனுமதியினை வழங்குகின்ற அதே நேரத்தில் ஜனாதிபதியினாலே நியமனம் பெற்ற பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சட்டபூர்வமானதாக இல்லை என்ற காரணத்தினாலே தேசபந்து தென்னக்கோன் என்ற பொலிஸ்மா அதிபரை அந்த பதவியில் இருந்து இடைநிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது” என்றும் சுட்டிக்காட்டினாா்.

இது தொடா்பில் மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “இந்த உத்தரவையடுத்து அமைச்சரவை அவசர அவசரமாக கூடி ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தம் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதான செய்திகள் எங்களுக்கு கிட்டியிருக்கின்றது. ஒரு நிரந்தர பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்த முடியாது என்ற கருத்து நிலவுவதாக நாம் அறிகின்றோம். சட்டத்திலே எந்தவித தடையும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன் ” என்றும் தெரிவித்தாா்.