போதையால் இளைஞன் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் மீண்டும் பரிதாப சம்பவம்

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் நேற்று உயிரிழந்தார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் உணவருந்திவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள்
நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக
உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, அண்மைய காலமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு போதைப் பயன்பாடு காரணமாக பலரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.