மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர்.
அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதுஇந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.
நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு நிற கொடிகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியை தகர்த்திய ஆர்ப்பாட்ட காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர். இதன் போது பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து , காலிமுகத்திடல் வரையான வீதி நேற்று பிற்பகல் 1.30 இற்கு பின்னர் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன், பொலிசார் சாரதிகளை மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தனர்.