மனித உரிமைகள், சமூக நீதி தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்கிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதிலும், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாக பின்னோக்கிச் செல்வதாக, குறித்த அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் நாடு ஜனாதிபதித் தேர்தலை நடத்த தயாராகும் போது, ரணில் விக்ரமசிங்க புதிய அடக்குமுறை சட்டங்களுடன் எதிர்ப்புகளை ஒடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.