மன்னார் மனித புதைகுழி விவகாரம்: முழுமையான விசாரணை அறிக்கையைத் தயாரிக்க நீதி மன்று உத்தரவு

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத்  தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் (05)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த புதை குழியில் ஏற்கனவே 376 மனித எச்சங்கள் எடுக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் அகழ்ந்து மிகுதி மனித எச்சங்களை உடனடியாக எடுக்கத் தேவையில்லை என  ஒட்டுமொத்த தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு  அமைவாகத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தற்போது இந்த மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் காணாமல் போன தரப்பில் ஒட்டுமொத்த அறிக்கை(compression report) என்ற அடிப்படையிலும் இதுவரையில் நடந்தது என்ன? இனி தொடர்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது அவற்றை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களை சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் சார்பில் எங்களுடைய கோரிக்கைக்கு அமைவாக ராஜ் சோமதேவ் அவர்களின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும், குற்றத்தடுப்புப் பிரிவினரின் அறிக்கையும் ஏனைய நிபுணர்களின் அறிக்கையும் ஒன்றிணைந்து  அறிக்கைகளாக பெற்றுக் கொண்ட பின்னரே இது தொடர்பாக தொடர்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா இல்லையா எனத்  தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அதை தரம் பிரிப்பு செய்யவதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, மனித எச்சங்கள் தனியாகவும்  ஏனைய பொருட்கள் தனியாகவும் தரம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு பிற்பாடு தான் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது. இது தொடர்பாக வைத்தியர் மீண்டும் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கிறது. இதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும்,இதுவரை நடைபெற்ற அகழ் பணியில் கண்ட விடயங்கள் நடை பெற்ற விடயங்கள் தொடர்பாகவும்,நீதிமன்றத்திற்கு வைத்தியர் ராஜபக்ஷ அறிக்கையொன்று சமர்ப்பிக்க வேண்டி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அது வரையான காலப்பகுதியில் குறித்த புதைகுழியை பொலிஸார் முழுமையாக பாதுகாக்குமாறும், இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 12,13ஆம் திகதிகளில்  மீண்டும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.