மாலி மீதான பொருளாதாரத்தடை ரஸ்யாவினால் முறியடிப்பு

கடந்த 31 ஆம் நாளுடன் காலாவதியாகும் மாலி மீதான பொருளாதாரத்தடையை நீடிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளது.

மாலி மீதான பொருளாதரத்தடைகள் மற்றும் ஐ.நாவின் கண்காணிப்பு என்பன எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் வரையிலும் நீடிக்கப்பட வேண்டும் என கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை, ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை நிராகரித்துள்ளது.

ரஸ்யாவின் இந்த நடவடிக்கையினால் மாலி மீதான அனைத்து தடைகளும் கடந்த வியாழக்கிழமையுடன் (31) முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை தொடர்ந்து அங்கிருந்த பிரான்ஸ் நாட்டு படையினர் முற்றாக வெளியேறியுள்ளனர். தற்போது அங்கு தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரும் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியுடன் வெளியேறவேண்டும் என்ற காலக்கெடுவை புதிய அரசு விதித்துள்ளது. அங்கு 15,000 இற்கு மேற்பட்ட ஐ.நா படையினர் தங்கியுள்ளனர்.