ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே இன்று(10) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக அறிவித்திருந்தன.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேன பிரிந்தார்.
குடும்ப ஆட்சி, ஊழல், மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பலர் வெளியேறினர்.
கடும் மோதலுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை வீழ்த்தி, மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கட்சி யாப்பின் பிரகாரம், தமது கட்சியில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவரே கட்சியின் தலைவராக செயற்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனினும் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க முடியாது என மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கட்சியிலிருந்து தற்காலிகமாகவே வெளியேறியதாகவும், ராஜினாமா செய்யவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறு எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க இறுதியாக இணக்கம் எட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் ஆலோசகர்களாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது எதிர்த் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமைக்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ சார்ந்த சிலர் குரல் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிலர் உருவாக்கி, அந்த கட்சியின் சின்னமாக தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாரிய வெற்றியை தன்வசப்படுத்தினர்.
அந்த தேர்தலிற்குப் பின்னர், இலங்கை வரலாற்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன பிரதான கட்சிகளை பின்தள்ளி, முதலாவது தடவையாக கட்சியொன்று பெரும்பான்மை வெற்றி பெற்ற சந்தர்ப்பமாக பதிவானது.
இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு கட்சிக்குள் தோற்றம் பெறத் தொடங்கியது.
இதற்கமைவாக, ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வசம் காணப்பட்ட அதிகாரங்களை பறித்து, அவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கினார்.
எனினும், 52 நாள் போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்குத் தெரிவாகினர்.
அதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான மோதல் அதிகரித்த நிலையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று கைகோர்த்துள்ளது.
இரண்டு கட்சிகளாக இருந்தாலும், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு கிடையாது என சிறிலங்கா சுதந்தரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரே தலைவர் கோத்தபயா ராஜபக்ஸ என்ற நிலையிலேயே தாம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமது கட்சியின் கொள்கைக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும் இடையில் மாற்றங்கள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை காரணிகளைக் கொண்டே, சிறிலங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு புதிய பாதையொன்று தேவைப்பட்டதாகவும், அதனால் அதே கட்சியின் அரசியல் அடிப்படைக் காரணிகளைக் கொண்டு உருவான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவின் முதலாவது காதலி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.