மைத்திரியின் வாக்குமூலம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் – சி.ஐ.டி.க்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலம் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் தாக்கல் செய்த முறைப்பாடுகளை ஒரே நேரத்தில் விசாரணை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் முடிவில் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக காணப்பட்டதாகவும், அவர் இன்னும் அந்த மனுதாரர்களுக்கு நட்டஈடு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்துமாறும் சட்டத்தரணி கோரியுள்ளார். இதேவேளை, இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.