ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின மேடையில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேராவுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்பிக்க பெரேராவை நியமிப்பதற்கான மறைமுக அறிவிப்பே என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக தம்பிக்க பெரேராவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அவருக்கு முன்வரிசையில், பஸில் ராஜபக்ஷவுக்கு அருகில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதற்கான பிரதான மேடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்த ஆசனத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் அவருக்கு அடுத்ததாக பஸில் ராஜபக்ஷவும் அதற்கு அடுத்ததாக தம்மிக்க பெரேராவும் அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்படலாம் என்று முன்னர் செய்திகள் வெளியான போதும், அதனை மகிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்தார். இந்நிலையில் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளியாகி வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் அவருக்கு கட்சியின் மேதின மேடையில் முன்வரிசை ஆசனம் வழங்கியிருப்பது அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளாக இருக்கலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.