யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5 போராட்டம் – வடக்கு மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

303 10 யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5 போராட்டம் - வடக்கு மீனவர் சங்கங்கள் அறிவிப்புவடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது நேற்று இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகையில் இந்த போராட்டமானது 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும்.

இந்த போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சிபூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடல் தொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும்
அதில் முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் நடித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது எங்களுக்கு தெரிந்த விடயம். வட புலத்திலே வாழ்கின்ற மீனவர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்டவிரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது.

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கி விட்டு செல்கின்றார்கள்” என்று அவா் தெரிவித்தாா்.