யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின் பலன் உரியவாறு கிடைக்கவில்லை – சஜித் பிரேமதாஸ

image 6487327 1 யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின் பலன் உரியவாறு கிடைக்கவில்லை - சஜித் பிரேமதாஸயுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. யுத்தமொன்று முடிவடைந்த பின்னர் சமாதானத்தின் பலனைக் கூட சரிவர இச்சமூகம் பெறவில்லை. இன்னும் கூட இப்பிரதேசங்களில் யுத்தத்தால் அழிந்து போன பாடசாலைகள் இருக்கின்றன. சமாதானம் ஏற்பட்டு 15 வருடங்களாகின்றன. யுத்தத்தை வெற்றி கொண்டதற்காக எத்தனை தடவை வாக்களித்தீர்கள். இன்னும் எமக்கு யுத்தத்தை காரணம் காட்ட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத வரலாற்றில், அரசியலால் நம்பிக்கையிழந்து போயுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய நம்பிக்கையை என்னால் மாத்திரமே வழங்க முடியும். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் தாம் மாத்திரமே எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்காக சேவைகளை முன்னெடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 202 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், திருகோணமலை, கோமரங்கடவல மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 26 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் மகளிர் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இதன் ஊடாக பெண்கள் கூட தகவல் தொழிநுட்பத்தில் வலுவூட்டப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை எமது ஆட்சியில் நாம் முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.