ரணில் ஜனாதிபதி வேட்பாளா் என்பது பெரமுனவின் நிலைப்பாடு அல்ல – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறினாலும் அது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் பொதுஜன பெரமுனவின் விரிவான கூட்டணியின் ஊடாகவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி நெல்லிகலவில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எது எப்படி இருந்தாலும் நாட்டின் அடுத்த ஜனாதிபதி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் ஊடாக தெரிவு செய்யப்படுவார் எனக்கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் இருக்கும் எமது கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக்கூறுகின்றனர். அதேபோல் வேறு சிலர் இன்னும் சில பேரின் பெயர்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து நாங்கள் அவசரப்பட தேவையில்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிக்கின்றோம்.

தனிப்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடும் சுதந்திரம் எமது கட்சியில் இருக்கின்றது. வேறு கட்சிகளில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டால், கட்சியில் இருந்தும் நீக்குவார்கள். இலங்கையின் இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேலியாக கூறியிருப்பார் என்றே நான் நினைக்கின்றேன்” என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தாா்.