லசந்தவை கொன்றது யார் என்று எனக்கு தெரியும் – மேர்வின் சில்வா தெரிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார்? என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், சிரச தொலைக்காட்சி வலையமைப்பு மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

தி சண்டே லீடர் பத்திரிகை மற்றும் லீடர் பப்ளிகேஷன்ஸின் ஸ்தாபகரான லசந்த விக்கிரமதுங்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேபோல், பிரபல றக்பி வீரர் தாஜுதீன் கார் விபத்தில் உயிரிழந்தார். இது முதலில் விபத்து என்று கூறப்பட்டது, எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது கொலையென தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.