வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

32 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்குப் போராட்டம் ஆரம்பமானது. “குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை விரைந்து பெற்றுத்தர வேண்டும்.

எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காகப் பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே, குற்றம் இழைத்தவர்களைச் சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்க வேண்டும். அதுவரை நாம் போராடிக்கொண்டே இருப்போம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டோர், “ஓ.எம்.பி. கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை, 12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.