வழக்குகளால் தமிழரசுக் கட்சி முடக்கப்பட்டுவிடவில்லை – தோ்தல்களையும் எதிா்கொள்ள முடியும் என்கிறாா் சுமந்திரன்

suma வழக்குகளால் தமிழரசுக் கட்சி முடக்கப்பட்டுவிடவில்லை - தோ்தல்களையும் எதிா்கொள்ள முடியும் என்கிறாா் சுமந்திரன்இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான நீதிமன்ற வழக்குகளினால் கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக்
கொண்டே இருக்கின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது என அக்கட்சியின் முக்கியஸ்தரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன், மேலும் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்பந்தமான வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாக கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு வரவிருக்கின்ற காரணத்தினால் அது குறித்து உரையாடப்பட்டது” என்றும் தெரிவித்தாா்.

“நாங்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த யோசனையின் விபரங்கள் நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம். ஆனால் பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என இணங்கப்பட்டிருக்கிறது. முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில் இடம்பெற்றது” என்று நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தா்.

“8 எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கில் அழைப்பார்கள். கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய இடையீட்டு மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கிறது. அதனால் வழக்கு தள்ளிப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் அதை தவிர நாங்கள் அனைவரும் மறுமொழி அணைத்து, இப்பொழுது குடியியல் நடவடிக்கைகள் சட்ட மூலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அமைவாக வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டத்தரணிகள் சகிதம் நீதிபதியோடு ஒரு கலந்துரையாடல் நடத்தப்படவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டாா் சுமந்திரன்.

“அந்த இடத்தில் தான் வழக்கை சுமுகமாக தீர்க்கக கூடிய வழிகள் என்ன என்பதை நீதிபதியோடு இணைந்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் சட்டப்படியாக இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம் திகதி மறுமொழி வழங்கிய பின்னர் ஒரு திகதியை தீர்மானித்து கலந்துரையாடலை மேற்கொண்டு வழக்கை என்ன மாதிரி முடிவுறுத்தலாம் என்ற தீர்மானத்திற்கு வரலாம். அதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூடி எடுக்கப் போகும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடி இணக்கப்பாட்டை தெரிவிக்கும்” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.