வவுனியா சிறையில் 3ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் – சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்

Prison Vaauniya வவுனியா சிறையில் 3ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் - சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்வெடுக்குநாறிமலையில் மகா சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களை வவுனியா சட்டத்தரணிகள் சிலர் பார்வையிட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தமக்கான நீதி வழங்கக் கோரி அவர்களில் 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது. கைது செய்யப்பட்ட 8 பேரில் ஆலயப் பூசாரியார் த.மதிமுகராசா மற்றும், தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அவர்கள் வழமைபோல் உணவை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வவுனியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலீப்காந் ஆகியோர் இன்று சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைப் பார்வையிட்டனர். இதன்போது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையை அவர்கள் உறுதிப்படுத்தினர்.