ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேசமயம் ஹெலியில் சென்ற எவரும் உயிரோடிருக்கும் வாய்ப்பில்லையென ஈரான் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை நாடான அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் அசர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதனை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்தது.
எனினும் ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது? ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்பட ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பன போன்ற தகவல்களை அரசு ஊடகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக செல்ல முடியவில்லை.இன்று சம்பவ இடத்தை அண்மித்த மீட்புப் பணியாளர்கள் விபத்தில் சிக்கிய ஹெலி தீக்கிரையாகி இருக்கலாம் என கருதுகின்றனர்.