இலங்கை: 21 தமிழ் நாட்டு மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழ்நாட்டு  கடற்தொழிலாளர்களில் 21 பேருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

மற்றைய கடற்தொழிலாளி 16 வயதிற்கு உட்பட்ட சிறுவனாக காணப்பட்டமையால், சிறுவனின் எதிர்காலத்தை மன்று கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைக்காது 10 ஆயிரம் ரூபாய் நன்னடத்தை பிணையில் விடுத்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இந்திய கடற்தொழிலாளர்கள்  22 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, 22 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதன் போது 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்த நீதவான், மற்றையவருக்கு நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளில் இரு படகுகளை அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மற்றைய இரு படகுகளுக்கான உரிமையாளர் இல்லாமையால், படகு உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.