22 ஆவது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு கிடைக்காது என்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தபோது, “22 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார்” என்று தெரிவித்தாா்.

”மறுபுறம் 22 ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது. தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள்” என்றும் முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க முன்வரலாம் என்றும் முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தாா்.