போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் வடக்கில் மீள ஆரம்பிக்கப்படவில்லை-ஜோசப் ஸ்டாலின்

வடக்கு மாகாணத்தில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன எனவும் போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

100 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளன. இலங்கை முழுவதும் தற்பொழுது 35 000 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 2000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன், கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகின்றது.

மூதூர் கல்வி வலயத்தில் 1 300ற்கும் அதிகமான ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றைக்குறையை உடனடியாக தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அது மட்டுமன்றி, இலவச கல்வியை சீரழித்து மாணவர்களிற்கு தொடர்ந்தும் அரசாங்கம் அநீதி இழைத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.