இலங்கை வரும் ஜப்பான் உயர் மட்ட குழு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. 

இரு நாடுகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த விஜயம் இடம்பெறுவதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் உயர் மட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளது.

இதன் போது கொழும்பில் இலகு ரயில் சேவை திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட  பல புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.  இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான ஜப்பான்  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் அதிருப்திக்கு உள்ளானது.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்தை தன்னிச்சையாக இரத்து செய்தமையானது ஜப்பான் – இலங்கை உறவில் கடுமையாக தாக்கல்  ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அண்மைய ஜப்பான் விஜயத்தின் போது, அங்கு முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட  கலந்துரையாடல்களின் பின்னர் இருதரப்பு உறவுகளில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் உட்பட எந்தவொரு நட்பு நாடுகளுடனான ஒப்பந்தங்களையும்  அமைச்சரவை  அனுமதியின்றி நிறுத்துவதற்கு இனிவரும் காலங்களில் இடமளிக்காது இருக்கும் வகையில் சட்டங்கள்  உருவாக்குவதாக இதன் போது ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கைகளின் அப்படையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாகவே ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது. இவர்களின் இந்த விஜயமானது இலங்கைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.