போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வு

இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வானது இன்று (08) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர் பொ.சச்சிதானந்தம் அவர்களின் தலைமையில் திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கக் கிளை மண்டபத்தில்  நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்  அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் குழுவும் மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளும் இணைந்து மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை மற்றும் விற்பனையை கண்டறியும் நோக்கில் பின்வரும் பரிந்துரைகள் அடங்கிய மனுவானது மேலதிக அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்டது.

போதை பொருள் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு மையங்களை செயல்படுத்தல்,      தொழில் வழிகாட்டல் மையங்களை இயங்கு நிலைக்கு கொண்டு வருதலும் மேலும் நிலைநிறுத்தலும், மாவட்ட பிரதேச இளைஞர் வேலை வலையமைப்புக்களை ஏற்படுத்தல்,                 சிவில் அமைப்புகளும் தமது பங்கினை தொடர்வதுடன் எதிர்காலத்தில் இணைப்பை பலப்படுத்தி நெருக்கமாக இயங்குதல் போன்ற பரிந்துரைகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களில் இளைஞர்களால் இனம் காணப்பட்ட  பிரச்சனைகளில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பரிந்துரைகளே இதன் போது கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர், செயலாளர், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும்  மாவட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்க இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.