கஸ்மீர் விடுதலைக்கு போராடிய தலைவர் நான்கு வருடங்களின் பின் விடுதலை

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்மீரில் விடுதலைக்காக போராடிய மதத் தலைவர் மிர்வைஸ் உமார் பாரூக் நான்கு வருடங்களின் பின்னர் இந்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இந்திய அரசினால் காஸ்மீருக்கான சுயாட்சி அதிகாரத்தில் கணிசமாக அதிகாரங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாரூக் உட்பட பல அரசியல் தலைவர்களை இந்திய அரசு வீட்டுக்காவல்களிலும் மற்றும் சிறைகளிலும் அடைத்திருந்தது.

அவ்வாறு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் பரூக்கும் ஒருவர். விடுதலைசெய்யப்பட்ட பாரூக் கடந்த வெள்ளிக்கிழமை(22) சிறீநகரில் உள்ள மசூதியில் தனது பூசை வழிபாடுகாளை மேற்கொண்டிருந்தார். இதன்போது பெருமளவான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

புதிய சட்டத்தை இந்தியா கொண்டுவந்த பின்னர் அங்கு புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பெருமளவான மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மசூதிகளிலும் பல மாதங்களாக தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனது அருமை மக்களே நான் உங்களை நான்கரை வருடங்களின் பின்னர் சந்திக்கின்றேன் என்னை அதிகாரவர்க்கம் வெளியில்வர 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 4 ஆம் நாளில் இருந்து அனுமதிக்கவில்லை என அவர் தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.