நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தை வாபஸ் பெறுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

ஊடக சுதந்திரத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

230 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கானால் கூட இதுபோன்ற சட்டமூலத்தைக் கொண்டு வர முடியவில்லை என்றும், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் சார்ந்த நிறுவனங்கள் வெளியேற எடுத்த முடிவே இதற்குக் காரணம் என்றும்,நமது நாட்டிலுள்ள இவ்வாறான நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செயலால் மக்களின் அடிப்படை உரிமை,ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமைகள் என்பன மீறப்படுகின்றன என்றும்,இது போன்ற சர்வாதிகார செயல்களுக்கு செல்லாது, சுதந்திரமாக தகவல்களைப் பெறும் வகையில் வலுவான சட்டமூலத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.