வவுனியாவில் சிலருக்கு போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை – ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செல்லவுள்ளார்.

இதன்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின் தலைவர், செயலாளர்கள் முன்னாள் அரசியல் கைதி, உள்ளிட்டவர்களுக்கு எதிராக குறித்த தடை உத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் அதன் பிரதிகள் இன்று அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஜனாதிபதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.