ஈழத் தமிழ் மக்களின் கனவு இன்று நனவாகியது: வெற்றி களிப்பில் சிறிதரன்

bgh ஈழத் தமிழ் மக்களின் கனவு இன்று நனவாகியது: வெற்றி களிப்பில் சிறிதரன்புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஈழவாழ் மக்களின் மன எண்ணங்களே இன்று என்னை வெற்றிப்பெறச் செய்துள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நான் தெரிவாவதற்குக் காரணமாக இருந்த இறைவன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஜனநாயக ரீதியான கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள் ஊடாக வரலாற்று ரீதியான அத்தியாயத்தைப் படைத்திருக்கின்றோம்.

இது பலபேருக்கு பலவித நம்பிக்கைகளை விதைத்துள்ளதுடன், இளைஞர்கள் மத்தியில் அதீத அக்கறை கொள்ள வைத்துள்ளது. இன்று என்னுடன் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எனது நண்பர்களான சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோருடன் ஒன்றிணைந்து பயணிப்போம். எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காகவும், தமிழ்த் தேசியத்தினுடைய ஒவ்வொரு அங்குல இருப்புக்காகவும் பொறுப்போடும் கடமையோடும் கட்சியின் பணிகள் முன்னெடுக்கப்படும்.

நாம் ஏற்கனவே எமது பலத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருந்தோம். எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது. தமிழ்த் தேசியத்தின் இருப்பு சார்ந்தது, எமது இருப்பின் அடிப்படை உரிமை சார்ந்தது. அந்த உரிமையைப் பலப்படுத்துவதற்காக நாங்கள் எங்களது கரங்களை ஒன்றாகப் பலப்படுத்துவோம்” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.