ஜனாதிபதி தேர்தலில் யாரையும் ஆதரிப்பதாக இதுவரையில் தீர்மானம் இல்லை – சந்திரிகா அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் வெளியான தகவல்களை சந்திரிகாவின் பணிமனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் சந்திரிகா எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் ஊடகங்கள், சமூகவலைதளங்கள் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சந்திரிகா அம்மையாரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.