எத்தனை சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் அவற்றை ஆத்ம பலத்துடன் முறிடிப்போம் – சிறீதரன்

கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் மாநாட்டுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து இரு மாவட்ட நீதிமன்றங்களாலும், மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எந்த வழக்கையும் எதிர்கொள்ளத் தயார். எமக்கு எதிரான சூழ்ச்சிகள், தடைகளை நாம் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம். என்னையும் எனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை.

என்னைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் எமது மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். நீதி நிச்சயம் வெல்லும்” என்றும் சிறீதரன் தெரிவித்தாா்.