முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஞானசார தேரா்

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோருவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கடுமையான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்தச் சமூகத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும்
என்றும், 8 வருடங்களின் பின்னர் அது பற்றி தான் உணர்ந்துகொள்கின்றார் என்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

அந்தக் கருத்துக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஞானசார தேரருக்கு நீதிமன்றால் கடும் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முஸ்லிம் சமூகத்திடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளதுடன் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தீவிரமான பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஞானசார தேரர் மூலகாரணமாக இருந்தார்.

அத்துடன் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டமைக்காகப் பொலிஸாரால் அவர் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.