தமிழரசுக் கட்சி மாநாட்டுத் தடைக்கும் எனக்கும் தொடா்பில்லை – சுமந்திரன்

இலங்கைத் தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது எனவும், வழக்குகளில் முன்னிலையான சட்டத்தரணிகளும் சுமந்திரனுக்கு ஆதரவானவர்கள் எனவும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேறு நபர்களால் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பில் நான் கருத்து கூற முடியாது. அதற்கு பொறுப்பாளியாகவும் முடியாது. கட்சி கோரிக்கை விடுத்தால் இந்த வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நான் முன்னிலையாகி கட்சி சார்பாக வாதாட தயாராகவுள்ளேன்.” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.