ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைப் பயன்படுத்தி சர்வதேச தலையீட்டை தடுத்து நிறுத்தினோம் – மங்கள சமரவீர

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எமது அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பயன்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பதை தடுத்து நிறுத்தினோம் என மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச தான் ஜனாதிபதியானால் ஐநா தீர்மானத்தை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ள நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

2014 டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ள மங்களசமரவீர  இலங்கை படையினர் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தனர் வர்த்தக வாய்ப்புகளும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் , இலங்கை அரசாங்கம் தனது சொந்த யோசனைகளை சமர்ப்பித்ததுடன் ஐநா தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது சொந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான இறமையுடன் கூடிய உரிமையை வலியுறுத்தியது இதன் காரணமாக சர்வதேச சமூகம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை தடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.