பல்தேசிய நிறுவனங்களிடம் தாரைவாா்க்கப்படும் வடக்கின் கடல் வளம் – ஆபத்தானது என்கிறாா் செல்வின்

selvin பல்தேசிய நிறுவனங்களிடம் தாரைவாா்க்கப்படும் வடக்கின் கடல் வளம் - ஆபத்தானது என்கிறாா் செல்வின்வடக்கு மக்களின் கடல்வளத்தை பல்தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் செயற்பாட்டால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படலாம் என சமூக செயற்பாட்டாளரும் மூத்த நிர்வாக அதிகாரியுமான செல்வின் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற மீனவர் அமைப்புகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு –

“மனிதன் வாழ்கின்ற இயற்கை சூழல் மக்களின் கட்டுப்பாட்டுகள் இருக்க வேண்டுமே அல்லாமல் பல்தேசிய கம்பனிகளிடம் இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். வடக்கு மக்களின் கடல் சூழல் பல்தேசிய கம்பனிகளிடம் தாரை வார்க்கும் செயற்பாடானது மீனவ மக்களின் வாழ்வியலை கடல் சூழலில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடாக அமைகிறது.

யாழ்ப்பாண குடாக்டலின் வெளிப்புறம் பாக்கு நீரிணையாகக் காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண குடாக்கடலின் பல இடங்களில் பாலங்கள் மற்றும் சிறிய மதகுகள் இடப்பட்டு இயற்கை நீரோட்டங்கள் மறிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாண குடாக்கடலை நம்பி வாழ்கின்ற சிறு மீன்பிடியாளர்களின் வாழ்வியல் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதுடன் சிறு கடல் தொழில் வேளாண்மை அழிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் 50 விதமான புரதம் கடல் உணவில் இருந்து பெறப்படும் நிலையில் யாழ்ப்பாண குடாவில் நீர் வேளாண்மை என்ற பெயரில் கடல் அட்ட பண்ணைகள், பாசி வளர்ப்புக்கள் திணிக்கப்பட்டு வருகிறது. அட்டை பண்ணைகளால் வருமானம் அதிகரிக்கும். அந்நிய செலாவணியை பெறலாம் என்ற கருத்து மேலோங்கி இருக்கின்ற நிலையில் அதனை நானும் மறுக்கவில்லை. எமது உணவுத்தட்டில் கடல் அட்டை இல்லாத நிலையில் நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அப்பால் இந்த வர்த்தக நீதியான துறை தோற்றுப் போனால்  பாரம்பரிய மீன்பிடியை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன என்பதை எவராலும் கூற முடியுமா?

பல்தேசிய கம்பனிகளின் வருமான மார்க்கத்திற்காக எமது வளங்களை விட்டுவிட்டு பல்தேசிக் கம்பனிகளின் விநியோகச் சங்கிலி தோற்றுப் போனால் மீண்டும் கடல் மீன்பிடியில் மீன்பிடி சமூகம் இறங்குமாக என்ற கேள்வி காணப்படுகிறது. ஆகவே எமது கடற் தொழில் சமூகத்தையும் அவர்களின் மீன்பிடி முறைகளையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்றால் கடலை சுதந்திரமாக சுவாசிக்க விட வேண்டும்” என்றும் செல்வின் தெரிவித்தாா்.