இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரில் கடத்தப்பட்டு வெட்டிக்கொலை – வட்டுக்கோட்டையில் பயங்கரம்

3 12 12 இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரில் கடத்தப்பட்டு வெட்டிக்கொலை - வட்டுக்கோட்டையில் பயங்கரம்மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டநிலையில் அந்தக் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழிமறித்தனர். ஒரு காரில் மனைவியையும் அடுத்த காரில் மேற்படி நபரையும் ஏற்றிக்கொண்டு அந்தக் குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியைச் சித்தங்கேணி சந்தியில் இறக்கிவிட்டனர்.

அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்குச் சென்றார். இந்நிலையில், அந்த நபரைக் கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்குக் கீழே அவரைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றனர்.

வைத்தியசாலையில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் இது தொடர்பில் வைத்தியருக்குத் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்துக்கு வந்த வைத்தியர் அம்புலன்ஸ் மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கொலையாளிகளைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு விசாரணைகளை நடத்தி வருகின்றது.