வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஆராய வாருங்கள் – தமிழ் எம்.பி.க்களுக்கு விக்கி அழைப்பு

வெடுக்குநாறிமலை பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்கு தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளை மேற்கொண்டவர்களை பொலிஸார் கடுமையாகத் தாக்கி கைது செய்திருந்தனர். அத்தோடு ஆலய பூசகர் உட்பட எட்டு பேர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இதுதொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயும் விதமாக தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரலாற்று பேராசிரியர்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி காலை 11 மணியளவில் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வரலாற்றுத்துறை வாழ்நாள் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய பத்மநாதன், வரலாற்றுத்துறை வாழ்நாள் பேராசிரியரான புஷ்பரட்ணம் ஆகியோருக்கும் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சம்பவங்கள் அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை எமக்குச் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பது அவசியமாகும். நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் நாடாளுமன்றத்திற்குள் ஒரு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருப்பினும் அவை ஒன்றுபட்ட முயற்சியாக இருக்க வேண்டியது அவசியம். அமைச்சரின் வேண்டுகோளுக்கு ஏற்ப வெடுக்குநாறி சம்பவம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த குழுவை அமைப்பவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

எனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது பேராசிரியர் பத்மநாதன் மற்றும் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பியுள்ளேன். கஜேந்திரன் சம்பவ இடத்தில் இருந்ததாலும் பெறுமதியான தகவல்களை வழங்கக்கூடியவர் என்பதாலும் அவரையும் அழைத்துள்ளேன். சுமந்திரன் அவர்கள் கைது செய்யப்பட்டவர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகியிருப்பதால் எமக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்க
முடியும் அவரையும் அழைத்துள்ளேன்.

16ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு 232, கோவில் வீதி, நல்லூரில் உள்ள எனது இல்லத்தில் சந்திப்போம் என்று பரிந்துரைக்கிறேன். எங்களுடன் இணைவீர்களா எனத் தெரிவிக்கவும்.மேலும் கடந்த திங்கட்கிழமை நல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் பல் பிடுங்கப்பட்டதால் என்னால் பங்கேற்க முடியவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.