கச்சதீவை அரசியலுக்காகக் கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிடவேண்டும் – கடற்றொழிலாளர் இணைய செயலாளர்

aalam கச்சதீவை அரசியலுக்காகக் கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிடவேண்டும் - கடற்றொழிலாளர் இணைய செயலாளர்இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடயம் தோன்றியுள்ளது. எனவே கச்சதீவை அரசியலுக்காகக் கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,

“இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்ச தீவு விடயம் தோன்றியுள்ளது. இதை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்த கூறி இருந்தாலும் அங்குள்ள மீனவர்களைக், குறிப்பாகச் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து மாற நினைக்கும் மீனவர்களை இந்தத் தொழிலில் உள் வாங்கி அவர்களை உற்சாக மூட்டுவதாக அமைகிறது. மீண்டும் மீண்டும் அவர்களைச் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கும், சட்டவிரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையை முன்னெடுக்க ஆதரிப்பதாகவும் காணப்படுகின்றது.

அரசியல் நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்திலும் இந்திய மத்திய அரசும் மிகவும் கவனமாக செயற்படுகிறது. கச்ச தீவு விடயத்தைப் பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியது தமிழகம்.

தமிழக அரசின் ஒவ்வொரு கால கட்டத்திலான கோரிக்கையை மத்திய அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இன்று அந்த சாதகத்தின் வெளிப்பாடுதான் தமிழகம் தான் கச்சதீவை வழங்கியதற்கு முழுக்காரணம் என்று இன்று அவர்களின் அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் ஒரு பூதாகரமான விடயமாக மாற்றியுள்ளனர்.

இலங்கை மீனவர்களை பொறுத்தவரையில், குறிப்பாக வட பகுதி மீனவர்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கான ஒரே நிலைப்பாடு இந்திய மீனவர்கள் எமது எல்லையை தாண்டக்கூடாது. எமது எல்லைக்குள் வந்து சட்ட விரோதமான இழுவை மடி தொழிலை முன்னெடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றனர். எமது மீனவர்கள் முகம் கொடுக்கும் துன்பங்களும், போராட்டமும் அதனை வலியுறுத்தியதாக உள்ளன.

தமிழக அரசாக இருந்தாலும், இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் பேசித் தமிழக மீனவர்களை உற்சாகப் படுத்துவதும் இந்த விடயத்தை கேலிக் கூத்தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை கண்ணியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியலுக்காக பேசப்படும் விடயமாக இருந்தால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவிலும் மக்களின் மனதிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கக்கூடும்.

எனவே கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும், மத்திய அரசும் கைவிட வேண்டும். இலங்கை அரசும் வடபகுதியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் இந்தக் கருத்துக்கு எவ்வித கருத்துக்களையும் கூறுவதாக இல்லை. வட பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்பையும் முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்கள் மௌனிகளாக உள்ளனர். கடற்தொழில் அமைச்சர் அதற்கு மேலாக ஒரு படி சென்று இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஒரு புறம் கருத்தைக் கூறுகிறார்.

மறுபுறம் இந்திய கம்பெனிகளின் அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்களுக்கு கதவை திறந்து விடுகின்றார். அவர்கள் வந்து செயல்பாட்டை முன்னெடுக்க ஆதரவு வழங்குகின்றார். அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.