தீா்வு என்ன என்பதை ரணிலும், அநுரவும் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வாா்களா? கிளிநொச்சியில் மனோ

k1 தீா்வு என்ன என்பதை ரணிலும், அநுரவும் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வாா்களா? கிளிநொச்சியில் மனோ“சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என கூறி அதை தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடமபெற செய்வதாக உறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவா் மனோ கணேசன், “ஏனைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் ரணில், அனுர ஆகியோரிடம் தமிழர்களுக்கான தீர்வை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பிரசுரிக்க சொல்லுங்கள்” என்றும் கோரிக்கை முன்வைத்தாா்.

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தாா்.

“ஜனாதிபதி தேர்தலை பொது வாக்கெடுப்பாக கருதி வடக்கு கிழக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு” என்றும் இங்கு தெரிவித்த மனோ கணேசன், “ஆனால் கடைசி நேரத்தில், ஒரு  பெரும்பான்மை வேட்பாளருக்கு 2ம் விருப்பு வாக்கு கொடுக்கலாம் என விக்கினேஸ்வரன் எம்பி சொல்வது, சந்தேகங்களை ஏற்படுத்தி, பொது வேட்பாளர் கோஷத்தை மலினப்படுத்துகிறது” என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.

“பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம். நான் வரலாறு முழுக்க மலையகத்தில் உரிமைக்கு குரல் கொடுத்து, வடகிழக்கில் உறவுக்கு கரம் கொடுத்துள்ளேன். அதனால் கரம் கொடுக்க இன்று கிளிநொச்சி வந்தேன். இன்று வடகிழக்கில் பெரும் சவால் இளைய தமிழ் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதாகும்.இதனால் தமிழர் ஜனத்தொகை குறைகிறது.

இன்று தமிழரசு கட்சியின் நிலைமையை கண்டு கவலை அடைகிறேன். நீங்கள் இங்கு பலமாக இருந்தால் தான் நாம் அங்கே பலமாக இருப்போம். இதை நான் 20 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன்” என்றும் மனோ கணேசன் தெரிவித்தாா்.