புத்தரின் போதனைகளை ஆராய ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் அறிவித்தாா்

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் (100 கோடி) ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சி பணிகளை இந்த வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும் செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாகவும் புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்த கட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு – மொறட்டுவை பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று நடந்த இலங்கை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.