லத்விய எல்லை வழியாக அகதிகளை அழைத்துச் சென்ற ஐந்து இலங்கையா் கைது

லத்வியாவின் எல்லை வழியாக அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்கள் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களில் ஒன்றின் முன்பக்கத்திலும் சாரதி ஆசனத்திலும் இருந்த இரண்டு இலங்கையர்களிடம், செல்லுபடியாகும் லத்விய வதிவிட விசா இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பின்னால் இருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும் எல்லை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த குழுவுடன் சட்டவிரோதமாக எல்லைக்குள் பிரவேசித்தவர்களுக்கு உதவியாக வந்த மற்றுமொரு வாகனத்தில் இருந்து மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்
பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

லத்வியாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை அழைத்துச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த ஐந்து இலங்கையர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படுமாயின் ஐந்து இலங்கையர்களுக்கும் இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் லித்விய எல்லைக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.