வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பல பகுதிகளில் கனமழை தொடரும் – ‘றெமால்’ புயல் உருவாகிறது

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இது அடுத்த 60 மணித்தியாலங்களுக்குள் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஓமான் நாடு சூட்டிய ‘றெமால்’ (Remal) என்ற பெயர் வழங்கப்படும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளா் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புயல் எதிர்வரும் 26ம் திகதி இந்தியாவின் ஒடிசாவுக்கும் மேற்கு வங்க மாநிலத்திற்குமிடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலினால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது. எனினும் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

எனவே இத் தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2024 ம் ஆண்டிற்கான தென் மேற்கு பருவமழை இலங்கையில் எதிர்வரும் 28 அல்லது 29ம் திகதி, ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் முதல் லாநினோ வின் செல்வாக்கு வடக்கு இந்து சமுத்திரத்தில் நிலவும் என்பதனால் இவ்வாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் தென்மேற்கு பருவக்காற்று காலப்பகுதியில் (செப்டெம்பர் வரை) தொடர்ச்சியான மிகச் செறிவான மழைவீழ்ச்சி 3 அல்லது 4 சந்தர்ப்பங்களில் (ஜுன் 10-25, ஜூலை 5-20, ஜூலை 26- ஓகஸ்ட் 08) கிடைக்கும் என்பதனால் இலங்கையின் மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசங்கள் இவ்வாண்டும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.