ரணில் தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல் – எம்.பி. ஒருவா் காயம்

8 ரணில் தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல் - எம்.பி. ஒருவா் காயம்ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவுக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்
இடம்பெற்றது.

எனினும், பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்கிரம தலையிட்டு இருவரையும் சமரசம் செய்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் குணதிலக ராஜபக்ஷவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகே அவரைத் தள்ள முற்பட்டபோது குணதிலக ராஜபக்ஷ மாடிப்படியில் வீழ்ந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், குணதிலக ராஜபக்ஷ எம்.பியுடன் தான் வாக்குவாதத்தில் மாத்திரம் ஈடுபட்டார் எனவும், ஆனால் அவரைத் தள்ள முயற்சிக்கவில்லை என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தாா்.