தமிழ்ப் பொது வேட்பாளா் வெற்றிபெற முழுமூச்சுடன் செயற்படுவோம் – புளொட் தீா்மானம்

PLOTE தமிழ்ப் பொது வேட்பாளா் வெற்றிபெற முழுமூச்சுடன் செயற்படுவோம் - புளொட் தீா்மானம்ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் கோரிக்கை வெற்றி பெற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) முழுமூச்சுடன் செயற்படும் என்று அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“நேற்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தனின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்’ என்ற தலைப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ம.பத்மநாதன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும், நாளாந்தம் முகம் கொடுத்துவரும் நெருக்கடிகளையும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய வகையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக்கொண்டதோடு அதனை முன்கொண்டு செல்வதற்கான முழு ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தோம்” என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

புளொட் அமைப்பின் இந்த அறிக்கையில், “இந்தத் தீர்மானத்தை ஒரு சில அரசியல் கட்சிகளினதும், ஒரு சில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாகவன்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுப்பதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை – தீர்மானங்களை மிகவும் காத்திரமான முறையில் வலுமிக்கதான முன்னெடுக்க முடியும் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்” என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் கோரிக்கை பேசுபொருளாக ஆரம்பித்த காலத்தைவிட இன்றைய காலகட்டத்தில், பல்வேறு தரப்பினரது அயராத முயற்சிகளால், அக் கோரிக்கையின் ஆதரவுத் தளம் அதிகரித்து வருவதோடு கோரிக்கையின் நியாயத்தன்மையும் பரந்த அளவில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை மேலும் சிறப்புறவும், தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் அக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தவும், இயன்றளவில் மிகப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியச் செயற்பாட்டு சக்திகளுடன் இணைந்து முன்கொண்டு செயற்படுவது, தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அவசியமானது என்பதை எமது கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டதோடு அதனை முன்கொண்டு செல்வதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.