மாமனிதர் வைத்தியர் ஜெயகுலராஜா முல்லைத்தீவில் காலமானார்

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றிய மாமனிதர் வைத்தியர் ஜெயகுலராஜா (Dr. T.W Jeyakularajah) இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.

கணுக்கேணி முள்ளியவளையைச் சேர்ந்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்து வந்துள்ளார்.

மாமனிதர் வைத்தியர் ஜெயகுலராஜா தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குண்டப்பா, புலேந்தின் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் துறைசார் தலைமைப் பொறுப்பை வகித்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியுள்ளார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (2024.06.17) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.