தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தியது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்து செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் நேற்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னெடுத்துச் செல்வது என்றும் ஒரு இறுக்கமான முடிவு நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தாா்.

”இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி ஏனையவர்களையும் இணைத்து இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக
தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை அடையக்கூடிய வகையில் இந்த தேர்தல் களத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம்” என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய உயர் பீட சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோா் கலந்துகொண்டனா்.