அமைச்சு பதவி பெறமாட்டேன்! ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன் – ராஜித சேனாரட்ன தெரிவிப்பு

அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பெறுவதற்கு நான் தயாரில்லை. எனினும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்துக்குத் தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களால் 15-20 வரையான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவரப்பட்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் வாழும் காலத்தில் இலங்கை முன்னைய சோமாலியாபோல் ஆவதைக் காண விரும்பவில்லை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்?

எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களுக்கான நல்ல திட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதியின் செயல்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.